வீட்டின் கொல்லைபுறம் -அது
சங்கதி பல பேசும் இடம்.
அங்கு நேசமுடன் கறவையினம்
காணலாம்,பாசமுடன்
நடை போட்டு இரையுண்ணும்
கொக்கரக்கோ இனமும் வளரலாம்.
அன்று இவ்விரண்டும் ஒரு சேர
பார்க்கும் வீடுகளே மெத்தவும் உண்டு.
நேரத்துக்கு கொக்கரிக்கும் சேவல் ,
பொறுப்புடன் ஒயிலாக நடை போடும் கோழி
முட்டை பல சேர்த்து அடைகாக்க
குஞ்சுகள் ஒவ்வொன்றும் அக்கோழியின்
இறகுகளுக்குள் எட்டி பார்க்கும் அழகு
காணக் கண் கோடி வேண்டும்
அரவணைப்பில் அவை அமைதியாக
திரிய நம் உள்ளம் பரவச மாவதென்ன.
வளர்ப்பார் கைகள் வாலாவிருக்குமோ.
தானியங்கள்,காய்கறிகள் ,சோற்று பருக்கை
அள்ளி இறைப்பரோ ,அழகு பார்ப்பாரோ.
அந்தோ,ஒருநாள் கழுகொன்று சடுதியில்
குஞ்சு ஒன்றை கவர்ந்ததே, விட்டாரோ வீட்டார்
விரட்டினார் கழுகை ,விழுந்த குஞ்சுக்கு
கால்முறிவு,பதறி கையில் எடுத்தார்
தந்தார் தனி பராமரிப்பு.ஆம் கோழி அதை இனி
சேர்க்குமோ ? சேர்க்காது ,அது அதன் கட்டுப்பாடு.
கொழு கொழுவென வளர்ந்தது குஞ்சு.,
எஜமானன் கையில் பாங்குடன்
பாசமாயும் ,நேசமாயும் ஒட்டிக் கொண்டது.
மே மாத விடுமுறை வந்தது.
எஜமானனின் செல்லப் பிள்ளை ,
வளர்ந்த பிள்ளை வந்தார்.எஜமானன் மனதில்
ஒரே சந்தோசம் ,பணியாளுக்கு இட்டார் கட்டளை
'பிடி அந்த நொண்டி குஞ்சை ,
என் மகனுக்கு கோழி என்றால் உயிர் '
ஆஹா ,இங்கு விலை போயிற்றா
அந்த நேசம் ?
ஏமாற்றும் மனிதன்,ஏமாந்த கோழி.
யார் விலை வைத்தது ?
கோதைதனபாலன்